முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு சொந்தமான காணியில் கிடைத்த பொருட்களால் அதிர்ச்சி
புத்தளம், அட்டவில்லுவ பகுதியில் முன்னாள் பிரதி பொலிஸ் மா சொந்தமான காணியில் விசேட அதிரடிப்படையினரும், வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளும் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பில் துப்பாக்கி ரவைகள் மற்றும் சிறுத்தை தோல் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கை விமானப்படையின் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், குருநாகல், ரிதிகல, கருவலகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் மற்றும் புத்தளம் விசேட அதிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகளும் இணைந்து இந்த சுற்றிவளைப்பை முன்னெடுத்தனர்.

ஒருவர் கைது
இதன்போது, பதப்படுத்தப்பட்ட பெரிய சிறுத்தை தோல், புள்ளிமான் தோல் ஒன்று மற்றும் 09 தோட்டாக்கள் அகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவ இடத்தில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையின்போது, தான் இந்தக் காணியை முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபரிடமிருந்து குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருவதாக அவர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கையில், கைப்பற்றப்பட்ட சிறுத்தை தோலானது சுமார் 6 அடி நீளமுள்ள ஒரு பெரிய சிறுத்தையினுடையது எனவும், இத்தகைய விலங்குகள் பொதுவாக வில்பத்து தேசிய பூங்கா மற்றும் அதனைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளிலேயே அதிகம் வாழ்கின்றன எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த காணியின் உரிமையாளரான முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபரை நேரில் அழைத்து, அவரிடம் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
ரிதிகல வனவிலங்குப் பிரிவின் அதிகாரிகள் முன்னின்று நடத்திய இந்தச் சோதனையானது, அப்பகுதி பிராந்திய வனவிலங்கு உயர் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது.