தாயின் கள்ளக்காதலனால் மகள் துஸ்பிரயோகம் ; சந்தேகநபர் தலைமறைவு
தாயின் கள்ளக்காதலன் மகளைத் துஷ்பிரயோகம் செய்தமையை மறைத்தமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்ட தாய், எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அனுராதபுரம் பதவிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், தாயின் கள்ளக்காதலனால் குறித்த சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

பொலிஸாருக்குத் தகவல்
இது குறித்து பதவிய பகுதி குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள் பொலிஸாருக்கு அறிவித்ததுடன், பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் துஷ்பிரயோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மூன்று பிள்ளைகளின் தந்தையான ஒருவரே இக்குற்றத்தைச் செய்துள்ளதாகவும், அவர் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தவர் என்றும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து உறவினர்களும் கிராம மக்களும் பொலிஸாருக்குத் தகவல்களை வழங்கியுள்ளனர். சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன், அவர் அப்பகுதியை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் பல கோணங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தனது மகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியை மறைத்து, அதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் குறித்த தாயைப் பதவிய பொலிஸார் கைது செய்தனர்.
நேற்று (05) கெபித்திகொல்லேவ நீதவான் நீதிமன்றில் அவர் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமி அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் தங்கிச் சிகிச்சை பெற்ற பின்னர், தற்போது பதவிய பொலிஸாரின் பொறுப்பில் உள்ளார்.
சிறுமியின் பாதுகாப்பு குறித்து நீதிமன்றத்தில் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்படவுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.