யாழ் பெண்ணின் பெயரில் இஷாரா செவ்வந்திக்கு போலி கடவுச்சீட்டு; ஐரோப்பாவிற்கு செல்ல முயற்சி
கணேமுல்ல சஞ்சீவ கொசை சம்பவத்தில் தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தி நேபாள நாட்டில் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் அது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
இஷாரா செவ்வந்தி யாழ்ப்பாணப் பெண்ணின் பெயரில் போலியான கடவுச்சீட்டைத் தயாரித்து ஐரோப்பாவுக்குத் தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐரோப்பாவுக்குத் தப்பிச் செல்ல திட்டம்
நேபாள அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கை பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸார் இணைந்து மூன்று நாட்கள் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இஷாரா செவ்வந்தி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இஷாரா செவ்வந்தி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “ஜேகே பாய்” என்பவரின் உதவியுடன் படகு ஊடாக இந்தியாவிற்கு சென்று பின்னர் அங்கிருந்து ரயில் ஊடாக நேபாளத்திற்கு தப்பிச் சென்று போலி அடையாளத்துடன் சொகுசு வாடகை வீடொன்றில் தலைமறைவாகி இருந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய , குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அசங்க கரவிட்ட ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில், விசேட பொலிஸ் குழு ஒன்று நேபாளத்திற்கு சென்று இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள “கெஹெல்பத்தர பத்மே” என்பவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் இஷாரா செவ்வந்தி தலைமறைவாக உள்ள இடம் தொடர்பில் தகவல்கள் கிடைத்தாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேபாளத்தில் இஷாரா செவ்வந்தியுடன் ஜேகே பாய் உட்பட மேலும் நால்வர் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இஷாரா செவ்வந்தி யாழ்ப்பாணப் பெண்ணின் பெயரில் போலியான கடவுச்சீட்டைத் தயாரித்து ஐரோப்பாவுக்குத் தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நேபாளத்தில் கைதுசெய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட ஏனைய சந்தேக நபர்களை இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.