பொருளாதார மையங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் ; ஈரானின் கடும் எச்சரிக்கை
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தாக்குதல்கள் தொடருமானால், மத்திய கிழக்கில் உள்ள அனைத்து பொருளாதார மையங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.
தாக்குதல்கள் தொடர்ந்தால் இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை ஜெனரல் இப்ராஹிம் ஜப்பாரி எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் பிரதான மையங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தத் தீர்மானித்தால், அதற்குப் பதிலடியாக பிராந்தியத்தின் அனைத்து பொருளாதார மையங்களும் இலக்கு வைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை ஏற்கனவே 80 டொலர்களைக் கடந்துள்ள நிலையில், இது விரைவில் 200 டொலர்களை எட்டக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, ஈரான் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் காரணமாக இதுவரை அந்நாட்டில் 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஈரான் செம்பிறை சங்கம் அறிவித்துள்ளது.