ஹார்முஸ் நீரிணையை கடக்கும் ஒவ்வொரு கப்பலுக்கும் 2 மில்லியன் டாலர் கட்டணம்; ஈரான் தீர்மானம்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு மத்தியில், உலகின் மிக முக்கிய கடல் வழிப்பாதையான ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) கடக்கும் கப்பல்களுக்குப் பெரும் தொகையை கட்டணமாக வசூலிக்க ஈரான் தீர்மானித்துள்ளது.
அதன்படி போர் நிறுத்த நிபந்தனைகளில் ஒன்றாக, ஹார்முஸ் நீரிணையை கடக்கும் ஒவ்வொரு கப்பலுக்கும் 2 மில்லியன் அமெரிக்க டாலர் (இலங்கை ரூபாவில் 62 கோடியே 47 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய்) கட்டணமாக வசூலிக்கப்படும் என ஈரான் அறிவித்துள்ளது.

யுத்தத்தினால் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்யவே கட்டணம்
யுத்தத்தினால் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்யவே இக்கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், இதில் ஒரு பகுதியை ஓமன் நாட்டுடன் பகிர்ந்து கொள்ளப் போவதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.
இக்கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே ஈரானின் பிரதான நிபந்தனையாகக் காணப்படுகிறது ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களைத் தொடர்ந்து, தனது கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியிருந்தது.
வடக்கில் விடுவிக்கப்படவுள்ள காணிகள்; மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு
இதனால் வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல் போக்குவரத்து முடங்கியது. இதன் விளைவாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, பல நாடுகளில் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஈரானுக்கு காலக்கெடு விதித்திருந்தார். இக்காலக்கெடு இன்று அதிகாலை 5.30 மணியுடன் நிறைவடையவிருந்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, ஈரான் மீதான தாக்குதலை 2 வாரங்களுக்கு நிறுத்தி வைக்க டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த இடைக்காலப் போர் நிறுத்தக் காலத்தில் ஹார்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் சம்மதம் தெரிவித்துள்ளது.