ஆண்களை மாத்திரம் விண்ணப்பிக்க கோரிய வர்த்தமானி தொடர்பில் விசாரணை
தொடருந்து நிலைய அதிபர்கள் பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் திருத்தத்திற்காக அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் இன்று உயர் நீதிமன்றத்துக்கு தெரிவித்தார்.
இந்த வர்த்தமானியை எதிர்த்து அயேஷானி ஜயவர்தன மற்றும் சுரேஷ் விதுஷா ஆகிய இரண்டு பெண்கள் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு, பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, நீதியரசர்களான குமுதுனி விக்ரமசிங்க மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதன்போதே, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட அரச சட்டத்தரணி நயனதாரா பாலபட்டபெந்தி, குறித்த வர்த்தமானி அறிவித்தல் திருத்தத்துக்காக அமைச்சரவைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
மனுவின் முன்னேற்றம் குறித்து தெரிவிக்க மற்றொரு திகதியில் அழைக்கப்பட வேண்டும் என்றும் அரச சட்டத்தரணி கோரினார். அதன்படி, தொடர்புடைய மனுவை எதிர்வரும் அக்டோபர் 30 ஆம் திகதி மீண்டும் விசாரிக்க உத்தரவிடப்பட்டது.
இலங்கை தொடருந்து நிலைய அதிபர்கள் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில், ஆண்கள் மட்டுமே பொருத்தமான பதவிக்கு விண்ணப்பிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் கூறுகின்றனர்.
இதனால், தகுதிவாய்ந்த பெண்கள் அந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கவும் தேர்ந்தெடுக்கப்படவும் வாய்ப்பை இழந்துள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த தீர்மானத்தின் ஊடாக தங்களில் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கவும், பெண்களும் விண்ணப்பிக்கும் வகையில் தொடர்புடைய வர்த்தமானி அறிவிப்பைத் திருத்துமாறும் உரிய தரப்புக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு மனுதாரர்கள் நீதிமன்றத்தை கோரியுள்ளனர்.