உரிமை கோரப்படாத காணி விவகாரம் தொடர்பில் வர்த்தமானிக்கு இடைக்கால தடை
உரிமை கோரப்படாத காணிகளை அரசுடமையாக்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செயற்படுத்துவதற்கு, உயர்நீதிமன்றினால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி, இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், அடிப்படை உரிமைகள் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதியரசர் யசந்த கோதாகொட தலைமையிலான மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் இன்று அழைக்கப்பட்டது.
இதன்போது பிரதிவாதிகள் தரப்பும் மனுதாரர் தரப்பும் முன்வைத்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதியரசர்கள் ஆயம் இந்த இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.
மூன்று மாத கால அவகாசத்துடன் கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
இந்த கால அவகாசத்துக்குள் 5,941 ஏக்கர் காணிகளின் உரித்தை உறுதி செய்யாவிட்டால் அவை அரசுடமையாக்கப்படும் என்ற வகையில் அந்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அந்த கால அவகாசம் நாளைய தினம் நிறைவடையவுள்ள நிலையிலேயே, அதனை நடைமுறைப்படுத்துவதற்கு நீதிமன்றத்தின் தடையுத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜூலை 2ஆம் திகதி மீண்டும் எடுத்துக் கொள்ளப்படும்.
அதற்குள் குறித்த வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் மீளப் பெற்றால், அதற்கான வர்த்தமானியை மன்றில் சமர்ப்பிக்குமாறும், நீதியரசர்கள் ஆயம் உத்தரவிட்டுள்ளதாக மனுதாரரான இலங்கை தமிழரசு கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.