பழமையான கத்தோலிக்க ஆலயம் ஒன்றில் புதையல் தோண்டும் மர்ம நபர்கள்
மன்னார், சவுத் பார் பகுதியில் நீண்ட காலமாக பராமரிப்பின்றி கைவிடப்பட்ட நிலையில் உள்ள மிகவும் பழமையான கத்தோலிக்க ஆலயம் ஒன்றில், மர்ம நபர்கள் சிலர் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
கத்தோலிக்க ஆலயமானது எவ்வித முழுமையான கட்டுமானங்களும் இன்றி, முற்றிலும் சேதமடைந்த நிலையில் பல வருடங்களாக காணப்படுகின்றது. மிகவும் பழமை வாய்ந்த இந்த ஆலயப் பகுதியில் குறித்த சட்டவிரோத அகழ்வு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அகழ்வு இடம்பெற்ற பகுதியில் திருஷ்டி நூல்கள், கற்கள்
புதையல் தோண்ட பட்டதாகக் கூறப்படும் குறித்த சம்பவ இடத்தில், மர்ம நபர்கள் விட்டுச் சென்ற சில தடயங்களும் பொதுமக்களால் அவதானிக்கப்பட்டுள்ளது.
அகழ்வு இடம்பெற்ற பகுதியில் திருஷ்டி நூல்கள், கற்கள் மற்றும் பூஜைக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சில பொருட்களும் காணப்படுவதாக நேரில் பார்த்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆலயம் அமைந்துள்ள பகுதியானது அதிக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். புனித ஜோசப் வாஸ் முனிவர் இலங்கைக்கு முதல் முறையாக வருகை தந்த பகுதிக்கு மிக அருகிலேயே இந்த ஆலயம் அமைந்துள்ளது.

எனினும், வரலாற்றுச் சிறப்பு மிக்க இப்பகுதியில் உள்ள குறித்த ஆலயம் நீண்டகாலமாக உரிய பராமரிப்பின்றி கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. பழமையான ஆலயத்தில் இடம்பெற்ற இந்த சட்டவிரோத புதையல் அகழ்வு முயற்சி தொடர்பில் அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும், பொலிஸார் இதுவரை சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை எனவும், இந்த விடயம் தொடர்பில் எவ்வித சட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை எனவும் மக்கள் கடும் விசனத்துடன் சுட்டிக்காட்டுகின்றனர்.
வரலாற்றுச் சின்னங்கள் அழிக்கப் படுவதையும், சட்டவிரோத புதையல் அகழ்வுகளையும் தடுக்க உரிய அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு தகுந்த விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.