ஆசியக் கிண்ணத்தை பெற மறுத்த இந்திய மகளிர் அணி
துபாயில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணி, ஆசிய கிரிக்கெட் பேரவைத் தலைவர் மொஹ்சின் நக்வியிடமிருந்து சம்பியன் கிண்ணத்தைப் பெற்றுக்கொள்ள மறுத்துள்ளது.
பரிசளிப்பு விழாவில் மொஹ்சின் நக்வி உள்ளிட்ட அதிகாரிகள் மேடையில் காத்திருந்தபோதிலும், இந்திய அணியின் வீராங்கனைகள் கிண்ணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக மேடைக்கு வரவில்லை.

அதேவேளை, இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த இலங்கை அணி பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு, இரண்டாம் இடத்திற்கான காசோலையைப் பெற்றுக்கொண்டது.
இந்த சம்பவம், கடந்த 2025ஆம் ஆண்டு நடைபெற்ற ஆடவர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியை நினைவுபடுத்தியுள்ளது.
அப்போதும் சம்பியன் பட்டம் வென்ற இந்திய ஆடவர் அணி, மொஹ்சின் நக்வியிடமிருந்து கிண்ணத்தைப் பெற்றுக்கொள்ள மறுத்திருந்தது.
மொஹ்சின் நக்வி ஆசிய கிரிக்கெட் பேரவை மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவராக இருப்பதுடன், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார்.
இந்தியா–பாகிஸ்தான் இடையிலான தொடர்ச்சியான அரசியல் பதற்றங்களின் பின்னணியில், நக்வியிடமிருந்து கிண்ணத்தைப் பெற இந்திய அணி விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.