இலங்கையில் தப்பியோடிய சிறைக்கைதிகளால் ரோந்து பணியில் இந்திய பொலிஸார்!
இலங்கையில் ஏற்பட்ட கலவரத்தின் போது சிறையில் இருந்து, தப்பிய கைதிகள் கடல் வழியாக தமிழகம் வரக்கூடும் என்பதால் தனுஷ்கோடி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் கடலோர காவல் குழும பொலிஸார் மற்றும் இந்திய கடலோர காவல்படை ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அங்கு உள்ள மக்கள் ஆளும் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வந்தவர்கள் மீது முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் வன்முறை வெடித்ததாக கூறப்படுகிறது.
இதை அடுத்து இலங்கையில் ஆளும் அரசுக்கு ஆதரவாக செயல்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வீடுகள் மற்றும் வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீயிட்டு எரித்து சேதப்படுத்தினர்.
இந்நிலையில் இலங்கை சிறையில் இருந்து தப்பிய 50 க்கும் மேற்பட்ட கைதிகள் கடல்வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவ வாய்ப்பு உள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் இந்திய கடலோர காவல்படை தீவிர ரோந்து பணியில் ஈடுப்பட்டு வருகிறது.