இந்திய மீனவர்களை விளக்கமறியல் வைக்க உத்தரவு
யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 29 இந்திய மீனவர்களையும் விளக்கமறியல் வைக்க யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 29 இந்திய மீனவர்களின் வழக்கு இன்று (15) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 36 படகுகளுடன் 279 இந்திய மீனவர்கள் கைது
கடந்த செப்டம்பர் 28ம் திகதி நெடுந்தீவு கடலில் சட்ட விரோத மீன்பிடியில் ஈடுப்பட்ட 12 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல் கடந்த 9ம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் சட்ட விரோத மீன்பிடியில் ஈடுப்பட்ட 17 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இரு வேறு தினங்களில் கைது செய்யப்பட்ட 29 இந்திய மீனவர்கள் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டிருந்தனர்.
வழக்கினை விசாரித்த ஊர்காவற்றுறை நீதவான் எதிர்வரும் 29ம் திகதி வரை 29 மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இதேவேளை 2025 ஆம் ஆண்டில் இதுவரை 36 படகுகளுடன் 279 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.