இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
தொழில் வாய்ப்பிற்காக சட்ட விரோதமான முறையில் வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2500 சம்பவங்கள் இவ்வாறு பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.
மேலும் “சட்ட விரோதமான முறையில் தொழிலுக்காக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த வருடத்தில் குறித்த எண்ணிக்கை 1900ஆக காணப்பட்டது. இந்த வருடத்தில் 2500 ஆக தொகை அதிகரித்துள்ளது.
மேலும், அனுமதிப்பத்திரமின்றி வெளிநாட்டுக்கு பணியாளர்களை அனுப்பியமை தொடர்பிலும் தனிநபராக அல்லது குழுவாக வெளிநாட்டு தொழிலுக்கு அனுப்புவதாக தெரிவித்து பண மோசடியில் ஈடுபட்டமை தொடர்பிலும் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 100 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் தனிநபர்களாக மற்றும் குழுக்களாக செயற்பட்ட 90 பேரும், அனுமதிப்பத்திரம் இன்றி வெளிநாட்டுக்கு பணியாளர்களை அனுப்புவதற்கு முற்பட்ட 9 நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனுமதிப்பத்திரத்தை பெற்றுத் தவறாக செயற்பட்ட நிறுவனமொன்றின் உரிமையாளரும் அதில் அடங்குகிறார்.
இந்நிலையில் சட்ட விரோதமாக வெளிநாடு செல்வதைத் தவிர்க்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.