கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கு செல்வோருக்கு வெளியான முக்கிய தகவல்
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா நாளை (27) ஆரம்பமாகவுள்ளது.
இரண்டு நாட்கள் இடம்பெறும் இந்த திருவிழாவில் பங்கேற்கும் யாத்திரிகர்களுக்கு பின்வரும் பயண ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடற்போக்குவரத்து
அதன்படி நாளை (27) அதிகாலை 4.00 மணி முதல் பி.ப 01.00 மணி வரை அரச பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலிருந்து குறிகட்டுவான் இறங்குதுறை வரை சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கச்சதீவுக்கான படகுச்சேவையானது குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து நாளை காலை 5.00 மணி முதல் பி.ப 02.00 மணி வரை சேவையில் ஈடுபடுத்தப்படும்.
இந்நிலையில் நாளை பிற்பகல் பி.ப 2.00 மணிக்கு பின்னர் கச்சதீவிற்கான கடற்போக்குவரத்து சேவை இடம்பெறமாட்டாது என்பதனால் யாத்திரிகர்கள் குறித்த நேரத்திற்கு முன்னர் தமது பயணத்தினை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குறிகட்டுவானில் இருந்து பயணிக்கும் ஒரு நபருக்கான படகிற்குரிய ஒரு வழிப் பயணக் கட்டணம் ரூ.1200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கச்சதீவு உற்சவத்தில் கலந்து கொள்ளும் யாத்திரிகர்களுக்கு நாளை மறுதினம் (28) காலை உணவு மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.