இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள அதிர்ச்சி அறிக்கை
இன்று 3 மணிநேர மின்வெட்டு நடைமுறைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, ABCD, EFGH, IJKL, PQRS, TUVW ஆகிய வலயங்களுக்கு பகலில் 1 மணி 40 நிமிடங்களும், இரவில் 1 மணி 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படவுள்ளது.
CC வலயங்களில் காலை 6 மணிமுதல் 8 மணிவரை 2 மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படவுள்ளதோடு, MNOXYZ ஆகிய வலயங்களில் காலை 5 மணிமுதல் 8 மணிவரை 3 மணிநேர மின்வெட்டு நடைமுறையாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் எதிர்வரும் நாட்களில் 10 முதல் 15 மணித்தியாலங்கள் மின் வெட்டினை நடைமுறைப்படுத்த நேரிடலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.
நாட்டில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், நீர் மின் உற்பத்தி நிலையங்களில் உரிய முறையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படாவிட்டால் இந்த நிலை உருவாகும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஒரு பகுதி திருத்தப் பணிகளுக்காக மூடப்பட்டுள்ளது.
இதனால் 270 மெகாவோட் மின்சார உற்பத்தி தடைப்பட்டுள்ளது. எரிபொருள் பிரச்சினையால் மேலும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக மின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
மின் உற்பத்தி உரிய முகாமைத்துவம் இன்றி நீர் மின் உற்பத்தி செய்தால், நீர் மட்டம் குறைந்து தற்பொழுது உற்பத்தி செய்யும் அளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாமல் போகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மின்சார உற்பத்தி தொடர்பில் நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் அனைத்து தரப்பினரும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தாமை பாரிய சிக்கல்களை உருவாக்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.