இலங்கை தொடருந்து சேவை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
அவசர அனர்த்த நிலைமை காரணமாக, 39 தொடருந்துகளைச் சேவைக்காக மீண்டும் கொழும்புக்குக் கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அலுவலக தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இலங்கை தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்தினம் ரம்புக்கனை, பொல்கஹவெல, குருநாகல், கண்டி, சிலாபம், புத்தளம் மற்றும் கணேவத்தை ஆகிய தொடருந்து நிலையங்களுக்குச் சென்ற 39 தொடருந்து தொகுதிகளே சிக்குண்டுள்ளன.
தொடருந்து பாதைகளுக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதால் இவற்றை மீண்டும் கொழும்புக்குக் கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால், தற்போதைய பயணிகள் நெரிசலுக்கு ஏற்றவாறு தொடருந்து சேவைகளை முன்னெடுப்பது மிகவும் கடினமான காரியமாக மாறியுள்ளதாக, இலங்கை தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.