சமூக வலைத்தளங்களில் பரவிய போலிச் செய்தி ; பளை வனப்பகுதி குறித்து அரசு விளக்கம்
கிளிநொச்சி மாவட்டம் பளை வனப்பகுதியில் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்று அமைக்கப்பட்டிருந்ததாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வரும் தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த தகவல் உண்மைக்குப் புறம்பானது என தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி, அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணகிபுரம் மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள பகுதியொன்றை அடிப்படையாகக் கொண்டே இந்தத் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டுள்ளன.

குறித்த பகுதி 1919ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 7064ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் 2025ஆம் ஆண்டு முதல் சட்டவிரோதமாக காடழிப்பு இடம்பெற்று வருவதாக தகவல்கள் பதிவாகியுள்ளன.
தியாகராஜா குணதீபன் என்பவர் ஆரம்பத்தில் 10 ஏக்கர் நிலப்பரப்பையும் பின்னர் 20 ஏக்கர் நிலப்பரப்பையும் ஆக்கிரமித்து, கற்றாழை மற்றும் காய்கறிச் செய்கைகளை மேற்கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஜனவரி மாதம் முதல் அப்பகுதியில் கட்டட நிர்மாணப் பணிகள் இடம்பெற்று, தற்போது நான்கு மாடிக் கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த கட்டடத்தில் இயந்திரங்களைப் பயன்படுத்தி உள்ளூர் மக்களை இணைத்து ஆடைத் தொழிற்சாலை ஒன்றும் நடத்தப்பட்டு வந்ததாகவும், அந்த நிறுவனம் பதிவாளர் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வனவள திணைக்களம் மற்றும் பொலிஸாரால் குறித்த பகுதியில் பலமுறை சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், நில ஆக்கிரமிப்பு தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த பெப்ரவரி 6ஆம் திகதி கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் குறித்த சந்தேகநபர் அந்தக் காணிக்குள் நுழைவதற்கு தடை விதித்திருந்தது. பின்னர், அந்தத் தடையை நீக்குமாறு பெப்ரவரி 17ஆம் திகதி அவர் முன்வைத்த கோரிக்கையும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.
இந்த வழக்கின் அடுத்த விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் 25ஆம் திகதி இடம்பெறவுள்ளது. நீதிமன்றத் தடையை மீறி சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் அகழ்ந்தெடுக்கப்பட்ட மணலை எடுத்துச் சென்றதாகவும் குறித்த நபருக்கு எதிராக பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
இதேவேளை, கடந்த ஜூலை 24ஆம் திகதி வனவள அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் தியாகராஜா குணதீபன் உள்ளிட்ட ஒன்பது பேர் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், குறித்த காணி தமக்குச் சொந்தமானது எனக் கூறி சம்பந்தப்பட்ட நபர் சில ஆவணங்களை நீதிமன்றில் சமர்ப்பித்துள்ள நிலையில், அவை தொடர்பான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான பின்னணியிலேயே, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சட்டவிரோத ஆக்கிரமிப்பு மற்றும் ஆடைத் தொழிற்சாலை நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, அங்கு புலிகளின் பயிற்சி முகாம் இயங்கியதாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்தப் போலிச் செய்திகளை சமூக வலைத்தளங்களில் பரப்பியவர்களை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.