சுமந்திரன் நிரூபித்தால் எம்பி பதவியில் இருந்து விலகத் தயார்; சிறிதரன் சவால்
இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம். ஏ. சுமந்திரன், தான் கடந்த காலத்தில் இராணுவத்தினரை பதவிகளில் நியமிப்பதற்காக எட்டு முறை வாக்களித்ததாகக் கூறிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்துள்ளார்.
புதிய கணக்காய்வு அதிபரை நியமிப்பதற்கான வாக்கெடுப்பின் போது, ஒரு முன்னாள் இராணுவ அதிகாரிக்கு ஆதரவாக வாக்களித்ததாகக் கூறி, கட்சி எடுத்த நடவடிக்கை மற்றும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

பதவியைப் பறித்த முடிவு அநீதியானது
சிறிதரன் முதன்முறையாக அரசாங்கத்துடன் இணைந்து வாக்களிக்கவில்லை என்றும், இதற்கு முன்னர் எட்டு சந்தர்ப்பங்களில் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாகவும் சுமந்திரன் குற்றம் சாட்டியிருந்தார்.
இது தொடர்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு சிறிதரனிடம் கேள்வி எழுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதன் விளைவாக, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்,
மேலும் அந்தப் பதவிக்கு இராசமாணிக்கம் சாணக்கியன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் , தனது பதவியைப் பறித்த முடிவு அநீதியானது என்றும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் பொதுச் செயலாளரும் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் குற்றம் சாட்டியுள்ளார்.