புலம்பெயர் தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் - தமிழ்நாடு அமைச்சர் ராஜ்மோகன் சந்திப்பு
பிரபல புலம்பெயர் தொழிலதிபரும் ஐபிசி தமிழ் ஊடகக்குழுமத்தின் தலைவருமான பாஸ்கரன் கந்தையா, தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனை நேரில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு நேற்று(26.05.2026) தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஈழத்தமிழர்கள் சார்பில் ஈழத்தமிழர் நலன், அகதி முகாம் வாழ்வாதாரம் மற்றும் கடற்றொழில் பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கை மனுவொன்றையும் பாஸ்கரன் கந்தையா அமைச்சர் ராஜ்மோகனிடம் கையளித்துள்ளார். அந்த மனுவில்,

ஈழத்தமிழர்கள் சார்பில் கோரிக்கை மனு
”மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு வணக்கம். தொப்புள்கொடி உறவுகளான தாய் தமிழக மக்களின் பேராதரவால் வெற்றிவாகை சூடி, தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் தங்களுக்கும், தங்கள் தலைமையிலான நல்லாட்சிக்கும் உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்கள் சார்பாக எமது இதயங்கனிந்த வாழ்த்துகளையும் பேரன்பையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
தாய் பாசம் காட்டிய தலைவனை இழந்து தவிக்கும் ஈழத்தமிழர்களுக்கு குரல்கொடுப்போம் என பிரசாரமேடைகளில் முழங்கியது போல ஆட்சி அமைத்தவுடன், முள்ளிவாய்க்கால் தமிழினத் துயரத்தை நினைவுகூர்ந்து, "அந்த வலியை என்றும் இதயத்தில் சுமந்திருப்போம்" என உருக்கமுடன் பேசியதன் மூலம் எமது இனத்தின் துயரத்தில் தாங்களும் பங்கெடுத்தமை, உலகத் தமிழர்களிடையே ஆழ்ந்த நம்பிக்கையையும் ஆறுதலையும் ஏற்படுத்தியுள்ளது.

அதற்காக, ஈழத்தமிழர்கள் சார்பில் எமது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.இன்றளவும் தமிழக அகதி முகாம்களில் பல்வேறு இன்னல்கள், அச்சங்கள் மற்றும் அடிப்படை வசதியின்மைகளுடன் வாழ்ந்து வரும் ஈழத்தமிழர் குடும்பங்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக தங்கள் அரசு சிறப்பு கவனம் செலுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழக கடற்றொழிலாளர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் குறிப்பாக, அடிப்படை மனித உரிமைகள், குடியுரிமை மற்றும் சட்ட பாதுகாப்பு, உயர்கல்வி வாய்ப்புகள், நிலையான வேலைவாய்ப்புகள், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றம் போன்ற துறைகளில் உரிய நடவடிக்கைகள் எடுத்து, அவர்களின் எதிர்கால வாழ்விற்கு ஒளிமிக்க விடிவை உருவாக்கித் தருமாறு பணிவன்புடன் வேண்டுகிறோம்.
மேலும், தமிழக கடற்றொழிலாளர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையில் மனக்கசப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி வரும் கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு மனிதநேய அடிப்படையில் விரைவான மற்றும் நிரந்தரமான தீர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
அதேவேளை, சிறப்பு முகாம்களில் நீண்டகாலமாக மனிதநேய வேதனைகளுடன் வாழ்ந்து வரும் தமிழ் உறவுகளின் வாழ்வில் அமைதியும் நிம்மதியும் மலர தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவர்கள் தங்கள் குடும்பங்களுடன் இணைந்து மரியாதையுடனும் சுதந்திரத்துடனும் வாழும் சூழலை உருவாக்கித் தருமாறும் பேரன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.
தமிழக அரசு மனிதநேயத்தின் அடையாளமாகவும் உலகத் தமிழர்களின் நம்பிக்கையின் ஒளிக்கோபுரமாகவும் தொடரும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையுடன் இம்மனுவை தங்கள் கனிவான கவனத்திற்கு சமர்ப்பிக்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது