மனைவியின் தொல்லையால் கருணைக் கொலை கோரிய கணவர்
இந்தியாவில் குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்த ஒருவர், மனைவியின் தொடர்ச்சியான தொல்லை மற்றும் பணம் கேட்டு துன்புறுத்துவதாகக் குற்றஞ்சாட்டி, தன்னை கருணைக் கொலை செய்யுமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிரீட் படேல் என்ற குறித்த நபர், மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்துள்ள மனுவில், 2024 நவம்பர் 14 ஆம் திகதி நடைபெற்ற தனது மூன்றாவது திருமணத்திற்குப் பின்னர் மனைவி தன்னை பல்வேறு வழிகளில் துன்புறுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
பணம் கேட்டு துன்புறுத்தல்
குடும்பத் தகராறுகள் ஏற்படும் போதெல்லாம், பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்களை தவறாகப் பயன்படுத்தி தமக்கு எதிராக புகார்கள் அளிப்பதாகவும், அதன் மூலம் சட்ட ரீதியான அழுத்தங்களை ஏற்படுத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், தனது முந்தைய திருமணத்தின் மூலம் பிறந்த குழந்தையையும் மனைவி துன்புறுத்துவதாகக் கூறியுள்ள அவர், இது தொடர்பில் பொலிஸாரிடம் பலமுறை முறையிட்ட போதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
தனது மனைவி பணம் மற்றும் நகைகளைப் பெற்ற பின்னரும் தொடர்ந்து பணம் கோரி அழுத்தம் கொடுத்து வருவதாகவும், ஜீவனாம்சம் மற்றும் குடும்ப வன்முறை தொடர்பான வழக்குகள் மூலம் தமக்கு மனஅழுத்தம் ஏற்படுத்துவதாகவும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
குடும்பப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஆண்களுக்கு போதிய சட்டப் பாதுகாப்பு இல்லை எனவும், அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் தீர்வு கிடைக்காததால் விரக்தியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, தனது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் தற்கொலை போன்ற கடுமையான முடிவை எடுக்க நேரிடலாம் என எச்சரித்துள்ள அவர், தன்னை கருணைக் கொலை செய்யுமாறும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனு தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.