மனைவியை கொலை செய்து பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த கணவன்
கண்டி, நாவலப்பிட்டி பிரதேசத்தில் தனது மனைவியை கல்லால் மற்றும் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற கணவன் நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் இன்று (04) அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் நாவலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய மனைவியே கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நீண்ட காலமாக பிரிந்து வாழ்ந்த தம்பதி
கொலை செய்யப்பட்ட மனைவி நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக நாவலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு நேற்று (03) சென்றுள்ளார்.
இதன்போது, குறித்த வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த கணவன், தனது மனைவியை கல்லால் மற்றும் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
தப்பிச் சென்ற கணவன் இன்றையதினம் (4) நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மனைவி மீதான தாக்குதலின் போது மகளுக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்ட மனைவியும் சந்தேக நபரான கணவனும் நீண்ட காலமாக பிரிந்து வாழ்வதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குடும்ப தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த நாவலப்பிட்டி பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.