யாழ். காவலில் தாக்கப்பட்ட கணவர் ; நீதிக்காக மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடிய மனைவி
களவு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தனது கணவர் மீது பொலிஸார் சித்திரவதை மேற்கொண்டு பின்னர் போதைப்பொருள் வழக்கில் சிக்கவைத்துள்ளதாக மனைவி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில் அவர் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.
பாதிக்கப்பட்டவரின் மனைவி தெரிவிப்பதாவது, கடந்த 14ஆம் திகதி வீடு ஒன்றில் இடம்பெற்றதாக கூறப்படும் களவு சம்பவம் தொடர்பில் விசாரணைக்காக தனது கணவர் உள்ளிட்ட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

மற்ற இருவரின் கைது விவரம் குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டபோதிலும், தனது கணவர் குறித்து எந்த தகவலும் வழங்கப்படவில்லை என அவர் கூறினார்.
மூன்று நாட்கள் கழித்து, அவர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பது 17ஆம் திகதியே தெரியவந்ததாகவும், அங்கு சென்றபோது கணவர் தாக்குதலுக்கு உள்ளாகி உடலில் காயங்களுடன் நடக்க முடியாத நிலையில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட காரணம் குறித்து கேட்டபோது முதலில் களவு குற்றச்சாட்டு என கூறிய பொலிஸார், பின்னர் அவரது உடைமையில் இருந்து “ஐஸ்” போதைப்பொருள் மீட்கப்பட்டதாக தெரிவித்ததாக மனைவி குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து கேள்வி எழுப்பியபோது, மேலதிகமாக நீதிமன்றில் விளக்கம் பெறுமாறு கூறி தன்னை பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேற்றியதாகவும் அவர் தெரிவித்தார்.
பின்னர் பருத்தித்துறை நீதிமன்றில் போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் ஆஜர்படுத்தப்பட்ட அவரை நீதிமன்றம் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் நீதி கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாக மனைவி மேலும் தெரிவித்தார்.