இலங்கையிலிருந்து மனித கடத்தல்... விசாரணையில் முக்கிய சந்தேக நபர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
இலங்கையிலிருந்து முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் மனித கடத்தல் சம்பத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முக்கிய சந்தேக நபரை என்.ஐ.ஏ என்ற இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
என்.ஐ.ஏ என்ற இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு நாடத்திய விசாரணையில், சந்தேக நபர் தனது சகாக்களுடன் சேர்ந்து, குறித்த இலங்கையர்களை தொடருந்துகள், சிற்றூந்துகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மூலம் மங்களூருக்கு அனுப்புவதற்கு முன்னர், அவர்களை ஒரு படகில் அடைத்து வைத்திருந்தாக தெரிவித்துள்ளார்.
2021ம் ஆண்டு ஜூன் மாதத்தில் கடத்தல்காரர்களிடம் இருந்து 13 இலங்கையர்கள் மீட்கப்பட்ட நிலையில், மங்களூரு நகர பொலிஸாரால் இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த கடத்தலில் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடைய ஈசன் என்ற இலங்கையரும் தொடர்புக்கொண்டிருந்தார் என்று என்ஐஏ தெரிவித்துள்ளது
அவர் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் கூட்டு சேர்ந்து 38 இலங்கையர்களை, தமிழ்நாட்டிற்குள் பல்வேறு இடங்களுக்கு சட்டவிரோதமாக அழைத்து வந்துள்ளார்.
கனடாவிற்கு இடம்பெயர்வதற்கான சட்டபூர்வமான ஆவணங்களைப் பெறுவதற்கு அவர்களுக்கு உதவுவதாக உறுதியளிக்கப்பட்டதாக என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் 2021 அக்டோபர் முதல் ஜனவரி 2024 வரை தலைமறைவான 3 பேர் உட்பட 10 பேர் மீது என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
தலைமறைவான எஞ்சியவர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.