மாத்தறை கூட்டுறவு வைத்தியசாலையில் வெடித்த மோதல் ; அதிகாரிகள் மீது தாக்குதல்
மாத்தறை கூட்டுறவு வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரத்தை முறையான தேர்தல் இன்றி கைப்பற்ற தேசிய மக்கள் சக்தியினர் மேற்கொண்ட முயற்சியால் இன்று (11) பிற்பகல் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வைத்தியசாலை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதுடன், பாரிய போராட்டத்தையும் முன்னெடுத்தனர்.

கடும் பாதிப்பு
மாத்தறை கூட்டுறவு வைத்தியசாலைச் சங்கத்தின் உறுப்பினர்கள் எனத் கூறிக்கொண்ட ஒரு குழுவினர் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்தபோது, அங்கிருந்த ஊழியர்களுக்கும் அவர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் காயமடைந்த வைத்தியசாலை ஊழியர்கள் இருவர் சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது, பூட்டப்பட்டிருந்த வைத்தியசாலைத் தலைவரின் அலுவலக அறையை பலவந்தமாக உடைத்துத் திறக்க ஆதரவாளர்கள் குழுவினர் பலமுறை முயற்சித்துள்ளனர்.
அவர்களை பொலிஸார் தடுத்தபோது, பொலிஸ் அதிகாரிகளுடனும் மோதல் ஏற்பட்டதுடன், சில அதிகாரிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிர்வாக அதிகாரத்தை தேர்தலின்றி கைப்பற்ற தேசிய மக்கள் சக்தியின் குழுவினர் கடந்த 2ஆம் திகதி முதலே பலமுறை முயற்சித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இன்றைய இந்தச் சம்பவத்தினால் வைத்தியசாலையின் நாளாந்த செயற்பாடுகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.