புகையிலை மற்றும் மதுபான பயன்பாடு காரணமாக இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாரிய இழப்பு
புகையிலை மற்றும் மதுபானப் பயன்பாடு காரணமாக இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 22,000 பேர் உயிரிழப்பதாக புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகார சபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை புகையிலை மற்றும் மதுபானம் பாவனையினால் ஏற்படும் நோய் சிகிச்சைக்காக ஆண்டுதோறும் 225 - 240 பில்லியன் ரூபா செலவிடப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் நிஹால் அபேசிங்க தலைமையில் கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற சுகாதாரம், ஊடகங்கள் மற்றும் மகளிர் வலுவூட்டல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் போதே இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டன.

இந்தத் தீய பழக்கங்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான சட்ட விதிகளுடன் கூடிய புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகார சபை சட்டத்தைத் திருத்துவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
உலகில் 104 நாடுகள் சிகரெட்டுகளைத் தனித்தனியாக (சில்லறையாக) விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளன.
அந்தச் சட்டத்தை இலங்கையிலும் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
சிகரெட்டுகளைத் தனித்தனியாக விற்பனை செய்யும் போது, அதன் பக்கெட்டுகளில் உள்ள சுகாதார எச்சரிக்கை படங்கள் நுகர்வோருக்குத் தெரிவதில்லை என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
சிகரெட்டுகளின் விலையைத் தீர்மானித்த பின்னரே அதற்கான வரி விதிப்பை மேற்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் தெளிவுபடுத்தினர்.
துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர், அதிகார சபையின் முன்மொழியப்பட்ட சட்டத் திருத்தங்கள் மற்றும் ஏனைய திட்டங்களுக்குத் தேவையான முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளார்.