வெளிநாட்டு தம்பதி மீது ஹோட்டல் உரிமையாளர் தாக்குதல்
கண்டி, ரஜபிஹில்ல மாவத்தையிலுள்ள ஹோட்டல் ஒன்றிற்கு தங்க வந்த போலந்து நாட்டு தம்பதியினரை ஹோட்டல் உரிமையாளர் தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலந்து நாட்டு தம்பதியினர் சுற்றுலா நிமித்தம் வருகை தந்துள்ள நிலையில் அவர்கள் இணையத்தளம் மூலம் குறித்த ஹோட்டலில் உள்ள அறையொன்றை முன்பதிவு செய்துள்ளனர்.
பொலிஸில் முறைப்பாடு
இந்நிலையில் ஹோட்டலுக்கு தங்க வந்த தம்பதியினர் , இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வசதிகள் ஹோட்டலில் இல்லாததால் அங்கு தங்க மறுத்துள்ளனர்.
இதனையடுத்து ஹோட்டல் உரிமையாளருக்கும் தம்பதியினருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஹோட்டல் உரிமையாளர் குறித்த தம்பதியினரை தாக்கியுள்ளார்.
சம்பவத்தின் போது ஹோட்டல் உரிமையாளர் மது போதையில் இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட போலந்து தம்பதியினர் இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு வழங்கியதையடுத்து இது தொடர்பான விசாரணைகளை கண்டி சுற்றுலா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.