உயிரிழந்த மகனின் உடலை தாமதமாக கொடுத்த வைத்தியசாலை: கவலை வெளியிட்ட தந்தை
கிளிநொச்சி சேர்ந்த இளைஞர் ஒருவர் புதுமுறிப்புக் குளத்தில் நீராட சென்ற நிலையில் நீரில் மூழ்கி நேற்று முன்தினம் (15) உயிரிழந்துள்ளார்.
இருந்தும் அவரது உடல் இன்று (17) செவ்வாய்கிழமை முற்பகல் 11 மணியளவிலேயே உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக இறந்த இளைஞனின் தந்தை கவலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வைத்தியசாலை விளக்கமளிக்கையில்,
ஞாயிறு மாலை மகனின் உடல் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதன் பின்னர் பிசிஆர் பரிசோதனை முடிவுகள் திங்கள் 3.30 மணியளவில் கிடைக்கப்பெற்றது.
இருப்பினும் செவ்வாய் முற்பகல் 11 மணிக்கு பின்னரே எம்மிடம் ஒப்படைக்கப்பட்டது. இது எமக்கு மிகவும் கவலையினை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய கொரோனா சூழலில் எமது மகனை இழந்த துயரம் ஒருபுறம் மறுபுறம் வைத்தியசாலையின் தாமதம் எனத் தெரிவித்துள்ள அவர், தனது தம்பியை இழந்த துயரத்தில் எனது மூத்த மகன் வைத்தியசாலையில் நடந்துகொண்ட முறையில் வைத்தியசாலையின் சில உடமைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
இதனை நாம் வைத்தியசாலை நிர்வாகத்தின் கோரியதற்கு அமைவாக திருத்தி கொடுப்பதாக கிராம அலுவலர் மூலம் உறுதிப்படுத்தி கடிதம் வழங்கியுள்ளோம் எனத் தெரிவித்த அவர் இறந்த ஒருவரின் உடலை வழங்குவதில் இழுபறி நிலை இருப்பது உறவினர்களை மேலும் வருத்துவதாகும் எனக் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் வைத்தியசாலை தரப்புடன் தொடர்பு கொண்டு வினவிய போது, திங்கள் பிற்பகல் 3.30 மணிக்கு பிசிஆர் முடிவுகள் கிடைக்கப்பெற்றன.
ஆனால் அதன் பின்னர் நீதிமன்றின் கட்டளை கிடைக்கப்பெறாமையால் உடற்கூற்று பரிசோதனை மேற்கொண்டு திங்கள் கிழமை உறவினர்களிடம் ஒப்படைக்க முடியாது போய்விட்டது. இதில் வேறு எந்தக் காரணங்களும் இல்லை எனத் தெரிவித்தனர்.
இதேவேளை பொலிஸார் நீதிமன்ற கட்டளையினை பெற்று திடீர் மரண விசாரணை அதிகாரியின் பரிந்துரைக்கு அமைவாக எமக்கு கிடைக்கபெறுகின்ற போதே உடற் கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்த சட்ட வைத்திய அதிகாரி,
பிற்பகல் 4 மணிக்கு பின்னர் உடற் கூற்று பரிசேதனைகள் மேற்கொள்வதில்லை என்றும் தெரிவித்தார்.