ஒரு நொடியில் மாறிய ஹனிமூன் கனவு ; புதுமணப்பெண்ணுக்கு நேர்ந்த கதி
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் உத்தர் தினாஜ்பூர் பகுதியைச் சேர்ந்த சவுவிக் தாஸ் என்பவருக்கும் நிகிதா சாஹா என்ற பெண்ணுக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணத்திற்குப் பின்னர் ஹனிமூனை கொண்டாடுவதற்காக புதுமணத் தம்பதி டார்ஜிலிங் பகுதியில் உள்ள சிட்டாங் மலைவாசஸ்தலத்திற்கு சென்றுள்ளனர்.
அங்கு உள்ள சொகுசு விடுதி ஒன்றில் அவர்கள் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விடுதியில் விருந்தினர்களுக்காக பார்பிக்யூ (Barbecue) செய்து கொடுக்கும் வசதி இருந்துள்ளது.
இதையடுத்து சவுவிக் தாஸ் மற்றும் நிகிதா சாஹா ஆகியோர் பார்பிக்யூ தயாரிக்கும் பகுதிக்குச் சென்றுள்ளனர்.

அங்கு விடுதி ஊழியர் ஒருவர் அடுப்பில் பார்பிக்யூ தயாரித்துக் கொண்டிருந்த நிலையில், புதுமணத் தம்பதி அந்த அடுப்பிற்கு மிக அருகில் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது.
இதன்போது, அடுப்பை எரியூட்டுவதற்காக பிளாஸ்டிக் கேனில் இருந்த திரவத்தை ஊழியர் ஒருவர் அடுப்பில் ஊற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.
அப்போது எதிர்பாராத விதமாக அடுப்பிலிருந்து திடீரென தீப்பிழம்பு எழுந்துள்ளது.
அருகில் அமர்ந்திருந்த நிகிதா சாஹாவின் உடலில் அந்த தீ பற்றியதுடன், சில நொடிகளிலேயே அவரது உடல் முழுவதும் தீ பரவியதாக கூறப்படுகிறது.
இதனைக் கண்ட அவரது கணவர் சவுவிக் தாஸ், தனது மனைவியின் உடலில் பற்றிய தீயை அணைக்க உடனடியாக முயன்றுள்ளார்.
அதேவேளை, அங்கிருந்த விடுதி ஊழியரும் தனது சட்டையை கழற்றி தீயை அணைக்க முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், இந்த சம்பவத்தில் நிகிதா சாஹாவுக்கு பாரிய தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பாக சவுவிக் தாஸ் முன்வைத்துள்ள குற்றச்சாட்டின்படி, விடுதியில் தீயை அணைப்பதற்கான உரிய உபகரணங்கள் தயார் நிலையில் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், தீக்காயமடைந்த தனது மனைவியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கும் விடுதி நிர்வாகத்தினர் போதிய உதவி வழங்கவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

சுமார் ஒரு மணி நேரம் அங்கேயே காத்திருந்த பின்னரே மருத்துவமனைக்கு செல்வதற்கான வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, நிகிதாவை சிலிகுரி நோக்கி அழைத்துச் சென்றுள்ளனர்.
சுமார் மூன்று மணி நேரம் நீடித்த அந்த பயணத்தின்போது, தீக்காயங்களால் ஏற்பட்ட கடுமையான வலியில் அவர் துடித்துக் கொண்டிருந்ததாக அவரது கணவர் தெரிவித்துள்ளார்.
பின்னர் நிகிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ பரிசோதனைகளில் அவரது உடலில் சுமார் 60 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விடுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக மேற்கொள்ளப்பட்டிருந்தனவா, தீயை ஏற்படுத்தியதாக கூறப்படும் திரவம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது, விபத்துக்குப் பின்னர் அவசர மருத்துவ உதவி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.