இலங்கையில் இளைஞர்களிடையே தீவிரமடையும் எச்.ஜ.வி
இலங்கையில் 15 - 29 வயதுக்குட்பட்டவர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே அதிக எண்ணிக்கையிலான எயிட்ஸ் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உலகில் பெரும் பேரழிவை ஏற்படுத்தும் பாலியல் வைரஸ்களில் எச்.ஐ.வியும் ஒன்றாகும். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை நேரடியாகத் தாக்கி உடலை பலவீனப்படுத்துகிறது.
மேலும் மிகவும் ஆபத்தான சூழ்நிலை என்னவென்றால், இருமல் அல்லது சளி போன்ற ஒரு சிறிய நோய் ஏற்பட்டால் கூட அது மரணத்திற்கு வழிவகுக்கும்.
எச்.ஐ.வி தொற்றுகள் ஏற்படக்கூடிய மூன்று முக்கிய வழிகளை சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
1. எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான ஒருவருடன் உடலுறவு கொள்வது எச்.ஐ.வி நோயாளியை முத்தமிடுவதால் நோய் பரவாது.
எனினும் பாலியல் ரீதியான உடலுறவினால் பரவுகின்றது. குறிப்பாக ஆசனவழி உடலுறவுதான் எச்.ஐ.வி வருவதற்கான முக்கிய காரணமாக கருதப்படுகின்றது.
இதுபோன்ற பாதுகாப்பற்ற உடலுறவு மூலம் பரவக்கூடிய எச்.ஐ.வி வைரஸ், உடல் முழுவதும் சுமார் 72 மணிநேரத்திற்குள் பரவி விடும்.
2. ஊசிகளின் கட்டுபாடற்ற பயன்பாடு ஊசி மூலம் போதைப்பொருள் பாவணை மூலமும் வெகுவாக பரவுவதுடன் ஒரே ஊசியை பலர் பயன்படுத்துவதற்கு இதற்கு காரணமாக அமைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
3.எயிட்ஸ் நோயாளியாக இருக்கும் கர்ப்பிணித்தாய்மாரிடத்தில் இருந்து அவரது பிறக்கவுள்ள குழந்தைக்கும் எச்.ஐ.வி வைரஸ் பரவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில் 411 நோயாளர்களும், 2022 இல் 607 நோயாளர்களும், 2023 இல் 697 நோயாளர்களும், 2024 இல் 824 நோயாளர்களும் கண்டறியப்பட்டுள்ளனர்.
அதிகளவில் ஆண்களே எயிட்ஸ் நோயாளர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.இது 7:1 விகிதமாகும். அதன்படி, 2025 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரை அடையாளம் காணப்பட்ட புதிய எயிட்ஸ் நோயாளர்கள் உட்பட, நாட்டில் இதுவரை 6,740 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.
2024 ஆம் ஆண்டில், 824 புதிய எச்.ஐ.வி தொற்றுகள் அடையாளம் காணப்பட்டன, அவற்றில் அதிகபட்ச எண்ணிக்கை கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலிருந்து பதிவாகியுள்ளது.
எயிட்ஸ் நோயினால் 47 பேர் உயிரிழந்துள்ளனர். இலங்கை குறைந்த எச்.ஐ.வி பாதிப்பு உள்ள நாடாகக் கருதப்பட்டாலும், கடந்த ஆண்டு பதிவான புதிய தொற்றுகளின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு கவலையளிப்பதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சுகாதார அமைச்சின் கீழ் செயல்படும் தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம், இலவச மற்றும் ரகசிய சோதனை மற்றும் சிகிச்சைகளை வழங்குகிறது.
இலங்கை முழுவதும் உள்ள 41 பாலியல் நோய் சிகிச்சை மையங்களில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களுக்கு இலவச சிகிச்சையை வழங்குகிறது.
எயிட்ஸ் தொடர்பான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் தொலைபேசி (+94 703 733 933) இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.