மீண்டும் கொட்டி தீர்க்கப்போகும் கன மழை ; மக்களுக்கு விடுத்துள்ள அவசர முன்னெச்சரிக்கை
வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வு கூறல்களின்படி, எதிர்வரும் திங்கட்கிழமை (29) முதல் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், அதனை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சம்பத் கொட்டுவேகொட இது குறித்துக் கூறுகையில், முப்படைகள், காவல்துறை மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றுக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டு, அவர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அத்துடன் அவசரகால மீட்புப் பணிகளுக்காகக் கடற்படை வீரர்கள், விமானங்கள் மற்றும் படகுகள் தயார் நிலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளின்படி, நாட்டின் கிழக்குப் பகுதியில் அலை போன்ற காற்று ஓட்டம் (Wave-like wind flow) உருவாகியுள்ளது.
இதன் காரணமாக வடக்கு,வடமத்திய,மத்திய,கிழக்கு மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களில் இயல்பை விட அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடகிழக்கு பருவமழைக் காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்த இடர்களைக் குறைக்கும் நோக்கில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறும், அதிகாரிகளால் அவ்வப்போது வழங்கப்படும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் மேஜர் ஜெனரல் கொட்டுவேகொட கேட்டுக்கொண்டுள்ளார்.