தமிழகத்தில் இருந்து தப்ப முயன்ற முல்லைத்தீவு யுவதிக்கு நேர்ந்த கதி!
இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்ப முயன்ற இலங்கையை சேர்ந்த இளம் யுவதி ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன. முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த சேர்ந்த சிவனேசன் கஸ்தூரி (வயது-19) என்ற யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கையில் இருந்து தப்பி தமிழகம் வந்து இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கியிருந்த நபருடன் ஏற்பட்ட காதலால் கடந்த 2018 ஆம் ஆண்டு விமானம் மூலம் அவர் சென்னை வந்துள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
விசா முடிந்த பின்னர் இலங்கைக்கு திரும்பி செல்லாமல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் குறித்த யுவதி சட்டவிரோதமாக தங்கி இருந்துள்ளார். இந்த நிலையில், முல்லைத்தீவில் வசித்து வரும் கஸ்தூரியின் தந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால் இலங்கைக்கு திரும்பி செல்வதற்காக இன்று அதிகாலை தனுஷ்கோடியில் இருந்து படகு மூலம் அவர் சட்ட விரோதமாக முல்லைத்தீவுக்கு புறப்பட்டுள்ளார்.
இதன்போது தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் மணல் திட்டு பகுதியில் இந்திய கடலோர காவல்படை ரோந்து படகு வந்ததை அறிந்த படகோட்டி, கஸ்தூரியை முதல் மணல் திட்டு பகுதியில் இறங்கி விட்டு சென்றுள்ளார்.
இதையடுத்து அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ராமேஸ்வரம் மெரைன் பொலிசார் படகில் சென்று கஸ்தூரியை கைது செய்து தனுஷ்கோடி அழைத்து சென்றதாகவும் கூறப்படுகின்றது. இதன்போது யுவதியிடம் முதல் கட்ட விசாரணை செய்து பின் ராமேஸ்வரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதேவேளை சமீப காலமாக இலங்கை மக்கள் சிலர் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகம் வந்து வெளி நாடுகளுக்கு சட்டவிரோதமாக தப்பிச் செல்கின்றதாக கூறப்படும் நிலையில், கஸ்தூரி வெளி நாடு செல்ல தமிழகம் வந்து சட்டவிரோதமாக தங்கி இருந்தாரா என்ற கோணத்தில் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன் தனுஷ்கோடியில் இருந்து சட்டவிரோதமாக நாட்டு படகில் அழைத்துச் சென்ற முகவரையும் அவர்கள் தேடி வருகின்றனர்.
அத்துடன் கஸ்தூரியிடம் இருந்து பாஸ்போர்ட் மற்றும் இலங்கை குடியுரிமை ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ராமேஸ்வரம் அனைத்து மகளிர் காவல் நிலைய பொலிசார் கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்துள்ளதுடன், விசாரணைக்கு பின்ன்னர் அவர் ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.