இளைஞரொருவர் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழப்பு: 8 பேர் அதிரடி கைது!
நுவரெலியா மாவட்டம் - ஹங்குரன்கெத்த – உடவத்தகும்புர பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் 8 சந்தேக நபர்கள் இன்று (27-06-2023) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மதுரட்ட, ரிகில்லகஸ்கடவல மற்றும் உடவத்தகும்புர பிரதேசங்களை சேர்ந்த 19 முதல் 63 வயதுக்குட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த புதன்கிழமை (21-06-2023) காணித் தகராறொன்றில் ஒரு குழுவினரால் கொடூரமாக தாக்கப்பட்டதில் 23 வயதான இளைஞரும் அவரது தந்தையும் காயமடைந்தனர்.
நான்கு நாட்களுக்கும் மேலாக கண்டி தேசிய வைத்தியசாலையில் உயிருக்குப் போராடிய இளைஞர் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த இந்த சம்பவம் தொடர்பில் முன்னதாக பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்தனர்.
இந்த நிலையில், நேற்றிரவு இளைஞரின் மரணத்தால் ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள், தலைமறைவாக இருந்த எஞ்சிய சந்தேக நபர்களை கைது செய்யாதமைக்கு அதிருப்தி தெரிவித்து ஹங்குரன்கெத்த காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர்.
அதன் போது, பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதையடுத்து, அங்கு கூடியிருந்த பிரதேசவாசிகளை கலைக்கும் முயற்சியில் பொலிஸார் சுமார் 38 எச்சரிக்கை துப்பாக்கிப் பிரயோகங்களை வானத்தை நோக்கி நடத்தியிருந்தனர்.என்பது குறிப்பிடத்தக்கது.