மாடறுப்புத் தடையில் பாதிப்பை அரசாங்கம் விரைவில் புரிந்துக் கொள்ளும்!
தற்போதைய அரசாங்கம் அமுல்ப்படுத்த துடிக்கும் மாடறுப்புத் தடையால் பாதிக்கப்படப்போவது முஸ்லிம் சமுகம் மாத்திரமல்ல, இந்நாட்டில் வாழும் சகல சமுகத்தினரும் தான் பாதிக்கப்படப் போகின்றார்கள் என்பதை அரசு புரிந்துக் கொள்ளும் நாள் வெகுவிரைவில் வரும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் (Imran Maharoof) தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
முஸ்லிம் சமுகத்திற்கு பாடம் புகட்டலாம் என்ற மாயையை பெரும்பான்மை சமுகத்திற்குக் காட்டுவதற்காகவே இலங்கை அரசாங்கம் மாடறுப்புத் தடையைக் கொண்டு வர முழுமுயற்சியுடன் செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள எல்லா சமுகத்தினரும் மாட்டிறைச்சியை சாப்பிடுகிறார்கள். மாட்டிறைச்சியை இந்நாட்டில் யார் யாரெல்லாம் சாப்பிடுகின்றார்கள் என்ற விடயம் மாட்டிறைச்சி விற்பனையாளர்களுக்குத் தெரியும்.
இலங்கையில் அதிக அளவு மாடுகளை வளர்ப்பது சிங்கள மக்கள் தான். பால் கறக்க முடியாத மற்றும் தேவைக்கு மேலதிகமாக உள்ள மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்யும் வாழ்வாதார நடவடிக்கைகளை இம்மக்கள் மேற்கொண்டு வருகின்றார்கள்.
மாடறுப்புத் தடையால் மிகவும் பாதிக்கப்படப் போவது சிங்கள மக்கள் தான். முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரை இரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதால் ஏற்கனவே அவர்கள் மாட்டிறைச்சி உண்பதைக் குறைத்து விட்டார்கள். இதனைவிட மாடுகளுக்கு காலத்துக் காலம் ஏற்படும் நோய்களினால் மாட்டிறைச்சி எல்லாக்காலமும் கிடைப்பதுமில்லை.
இலங்கையில் மாட்டிறைச்சி இல்லை என்றால் முஸ்லிம் மக்கள் யாரும் பட்டினி கிடக்க போவதில்லை. இதனால் இறந்து போகவும் மாட்டார்கள் என்பதை அரசாங்கத்திற்குச் சொல்லி வைக்க விரும்புகின்றேன். இதில் கவலைக்குரிய விடயம் என்னவெனில் இந்தத் தொழிலை நம்பி இருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்க அரசு எடுக்கும் நடவடிக்கையே இது.
இதற்கான மாற்று ஏற்பாடுகள் இல்லாமல் தடை செய்வது தற்போதைய அரசாங்கத்திற்கு கைவந்த கலை. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது குறித்தெல்லாம் இந்த அரசுக்கு கவலையில்லை. மஞ்சள் இறக்குமதித் தடை, அசேதன உரம் தடை, உழுந்து போன்ற தானியங்கள் இறக்குமதித் தடை போன்றன மாற்று ஏற்பாடு இல்லாமல் இந்த அரசு முன்னெடுத்த நடவடிக்கைகள்.
இதனால் பொதுமக்கள் அடைய போகும் பாதிப்புகள் குறித்து அரசு கவனம் செலுத்தியிருந்தால் மாடறுப்புத் தடையால் ஏற்படும் பாதிப்புகளுக்கும் மாற்று ஏற்பாடுகளை முன்னெடுத்திருக்கும். எனினும் அவ்வாறான மாற்று ஏற்பாடுகள் குறித்த எந்த அறிவித்தலையும் அரசாங்கம் இதுவரையில் விடுக்கவில்லை.
மாடறுப்பு தொழிலோடு நேரடியாக மற்றும் மறைமுகமாக சம்பந்தப்படும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பற்றியும் கவனம் செலுத்த வேண்டும். அவர்களது வாழ்வாதாரத்துக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு இம்ரான் எம்.பி (Imran Maharoof) தெரிவித்துள்ளார்.