புதிய வரித் திருத்தம் குறித்து அரசாங்கத்தின் அதிரடித் திட்டம்
இலங்கையின் வரி கட்டமைப்பில் பாரிய மாற்றங்களைக் கொண்டுவரும் நோக்கில், 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் அரசாங்கம் சமர்ப்பித்துள்ளது.
நிதியமைச்சர் அநுரகுமார திஸாநாயக்கவினால் கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி இதற்கான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது.
நாடாளுமன்றத்தில் இந்தசட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னரே இவை நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, காணி, கட்டடங்கள் அல்லது பங்குகளை விற்பனை செய்யும்போது கிடைக்கும் இலாபத்திற்காக செலுத்தப்படும் வரி அதிகரிக்கப்படவுள்ளது.

தனிநபர்கள் மற்றும் பங்காளர் வணிகங்களுக்கு தற்போதுள்ள 10% வரி வீதம் 15% ஆக உயர்த்தப்படவுள்ளது.
அறக்கட்டளைகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு தற்போதுள்ள 10% வரி வீதம் பாரிய அளவில் 30% ஆக உயர்த்தப்படவுள்ளது.
நிலுவை வரிகளுக்கான ஒருமுறை மாத்திரம் வழங்கப்படும் நிவாரணம் வரி செலுத்துவதில் தாமதம் அல்லது நிலுவை வைத்துள்ளவர்களுக்கு ஒரு விசேட சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
2023 மார்ச் 31 ஆம் திகதி வரை திரட்டப்பட்ட வட்டித் தொகையை முழுமையாகத் தள்ளுபடி செய்ய உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திற்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளது.
புதிய சட்டம் நடைமுறைக்கு வந்து 6 மாத காலப்பகுதிக்குள், அசல் வரித் தொகை மற்றும் அபராதங்களை முழுமையாகச் செலுத்த வேண்டும்.
2026 ஏப்ரல் 1 முதல், மதிப்பிடப்பட்ட வரி அறிக்கையைத் தாக்கல் செய்யும் முறை நீக்கப்படும். அதற்குப் பதிலாக, முந்தைய ஆண்டின் வருமானத்தின் அடிப்படையில் தவணை முறையில் வரி செலுத்த முடியும்.

ஒரு தனிநபர் தனது முந்தைய ஆண்டு வருமானத்தில் 120% இற்கும் அதிகமாக வரி செலுத்தி, எவ்வித மீளப்பெறலையும் கோராமல் சத்தியக்கடதாசி சமர்ப்பித்தால், அவரது வரி அறிக்கைகள் மேலதிக விசாரணையின்றி ஏற்றுக்கொள்ளப்படும்.
5% தடுத்து வைக்கப்படும் வரி விரிவாக்கம் புதிய சட்டத்தின் கீழ் மேலதிகமான பல சேவை வழங்குநர்கள் 5% தடுத்து வைக்கப்படும் வரிக்குள் உள்வாங்கப்படவுள்ளனர்.
கணக்காய்வாளர்கள், மதிப்பீட்டாளர்கள், தனிப்பட்ட பயிற்றுவிப்பாளர்கள் கலைஞர்கள், புகைப்படக் கலைஞர்கள், அழகுக்கலை நிபுணர்கள், சமூக ஊடக நிபுணர்கள் மற்றும் கடன் வசூலிப்போர் உள்ளிட்ட பல துறையினர் இதில் அடங்குவர்.
இதன் மூலம் இவர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படும் போதே, அதில் 5% கழிக்கப்பட்டு இறைவரித் திணைக்களத்திற்குச் செலுத்தப்படும்.