மதுபோதையில் சிக்கிய அரச பேருந்து நடத்துநர் ; இ.போ.ச அதிரடி நடவடிக்கை
இலங்கை போக்குவரத்துச் சபை (இ.போ.ச) பேருந்தின் நடத்துநர் ஒருவர் மதுபோதையில் கடமையாற்றியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், அவரிடமிருந்த பயணச்சீட்டுப் புத்தகம் மற்றும் பணம் அதிகாரிகளால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவிலிருந்து வவுனியா நோக்கி இயக்கப்பட்ட பேருந்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு
முதற்கட்ட தகவல்களின்படி, வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு நோக்கி காலை 6.30 மணிக்கு புறப்பட்ட குறித்த பேருந்து பின்னர் மீண்டும் முல்லைத்தீவிலிருந்து வவுனியா நோக்கி காலை 10.30 மணியளவில் பயணத்தை ஆரம்பித்துள்ளது.

இந்தப் பயணத்தின் போது நடத்துநர் மதுபோதையில் இருப்பதாக பயணி ஒருவர் தொலைபேசி ஊடாக முறைப்பாடு செய்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேருந்தை வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் மறித்து சோதனை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையின் போது, தான் மதுபானம் அருந்தியிருந்ததை நடத்துநர் ஒப்புக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட போக்குவரத்து சங்க பிரதிநிதிகள் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு, நடத்துநரிடமிருந்த பயணச்சீட்டுப் புத்தகம் மற்றும் வசூலிக்கப்பட்ட பணத்தை கைப்பற்றியுள்ளனர்.
பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, உடனடியாக மாற்று நடத்துநர் நியமிக்கப்பட்டு பேருந்து சேவை தொடரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.