டீசல் மின் உற்பத்தி மாபியாவிற்குள் சிக்கிய அரசாங்கம் ; சஜித் குற்றச்சாட்டு
அரசாங்கம் டீசல் மின்சார உற்பத்தி மாபியாவுக்குள் சிக்குண்டு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்குக் கட்டுப்பாடுகளை விதித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காக் கொண்டு, நீர்கொழும்பு தேர்தல் தொகுதிக்குட்பட்ட தளுவாகொடுவ பிரதேசத்தில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எமது நாட்டில் பெரும்பான்மையான மக்கள் தற்போது பெரும் சிரமத்துக்கும் அழுத்தத்திற்கும் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். கற்பனைக்கு எட்டாத வகையில் பொருட்களின் விலைகள் மற்றும் வாழ்க்கைச் சுமை அதிகரித்துள்ள நிலையில், அன்றாட வாழ்க்கையை எவ்வாறு நடத்துவது என்ற பிரச்சினைக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
பொருட்களின் விலை மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரித்தாலும், மக்களைப் பலிகொடுத்து ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் புரியவில்லை.
தற்போது அரிசி, தேங்காய் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதுடன், வட் வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துகள் இல்லை.
இந்த விடயம் தொடர்பில் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இது குறித்து சபையில் கேள்வி எழுப்பினால் 76 வருடங்கள் குறித்துக் குறைகூறுகின்றனர். அரசாங்கத்திற்குத் தெளிவான கொள்கை இல்லாமையே இதற்கு காரணமாகும்.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாக, மின்சாரக் கட்டணத்தை 33 சதவீதத்தினால் குறைப்போம் என்றது. எரிபொருள் விலையைக் குறைப்போம் என்றனர். ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை.
தற்போதைய அரசாங்கம் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு முன்னுரிமை வழங்குவோம் எனத் தேர்தல் காலத்தில் கூறியது. ஆனால் இன்று டீசல் மற்றும் அனல் மின் மாபியாவுக்கு அடிபணிந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை இல்லாதொழிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்தநிலையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து, அனுமதிகளைத் தாமதப்படுத்தி, டீசல் மின் உற்பத்தி நிலைய மாபியாவிற்கு இடம்கொடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.