ஐ.நா பிரதிநிதியுடன் கலந்துரையாடிய இலங்கை ஜனாதிபதி!
பசுமை விவசாய வேலைத்திட்டத்திற்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர் கனி விக்னராஜா ஆகியோருக்கிடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இன்று செவ்வாய்கிழமை (04-02-2022) சந்தித்த போதே இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
கனி விக்னராஜா, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் உதவி நிர்வாகி மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியப் பணியகத்தின் பணிப்பாளராகவும் செயற்படுகிறார்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது, 2021 பேண்தகு அபிவிருத்தி அறிக்கையின்படி இலங்கை மேலும் ஏழு புள்ளிகளைப் பெற்று, 165 நாடுகளில் 87ஆவது இடத்தைப் பெற்றுள்ளதென, விக்னராஜா சுட்டிக்காட்டினார்.
இந்த நிலைமையை மேலும் மேம்படுத்தி, பசுமை விவசாய வேலைத்திட்டத்துக்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள சமூகப் பொருளாதார பாதிப்புகள் தொடர்பில் உரையாற்றும் போது, நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்காக இலங்கை முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
'காலநிலை மாற்றத்துக்கு நிலையான தீர்வுகளுடன் கூடிய பசுமை இலங்கையை உருவாக்குவதற்கான ஜனாதிபதிச் செயலணி மற்றும் 'பொருளாதாரப் புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான செயலணி உள்ளிட்ட முறையான கட்டமைப்பு ஒன்று இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளதென, ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.