கோட்டாபயவிடமிருந்து ரணிலிக்கு சென்ற உத்தியோகபூர்வ அறிவிப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை வழங்கியுள்ளார்.
அதன்படி ஏற்கனவே அறிவித்தபடி தான் பதவி விலகுவதாக கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு சற்றுமுன் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 13ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியிலிருந்து விலகாவிட்டால் அறிவித்தல் இன்றி வேலைநிறுத்தம் மற்றும் முழு கடையடைப்பில் ஈடுபட போவதாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து நேற்றைய தினம் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை பதவி விலகக் கோரி நேற்று முன் தினம் கொழும்பில் மாபெரும் போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதன்போது ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன ஆர்ப்பாட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டிருந்தன.
இந்த நிலையில் அவசரமாக இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை பதவி விலகுமாறு வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து எதிர்வரும் 13ஆம் திகதி பதவியிலிருந்து விலகுவதாக ஜனாதிபதியினால் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் ஜனாதிபதி பதவி விலகுவது தொடர்பில் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினராலும் சந்தேகம் வெளியிடப்பட்டு வரும் நிலையில் தற்போது குறித்த தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.