கூகுளின் புதிய அதிசயம் ; ஒரு கண்ணாடியில் AI உலகம்
தொழில்நுட்பத்துறையின் முன்னணி நிறுவனமான கூகுள் தனது புதிய ஸ்மார்ட் கண்ணாடிகளின் வடிவமைப்பை நேற்று நடைபெற்ற கூகுள் ஐ/ஓ மாநாட்டில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் தோல்வியடைந்த விண்வெளி போன்ற இத்துறையில் கூகுள் மீண்டும் தடம் பதித்துள்ளது.
இந்த ஆண்டின் பிற்பகுதியில் சந்தைக்கு வரவுள்ள இக் கண்ணாடிகள், ஏற்கனவே 7 மில்லியனுக்கும் அதிகமான ரெய்-பான் ஸ்மார்ட் கண்ணாடிகளை விற்பனை செய்து இத்துறையில் முன்னிலையிலுள்ள மெட்டா நிறுவனத்திற்கு பலத்த போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூகுளின் இந்த ஓடியோ கண்ணாடிகளில் மைக்ரோஃபோன், கேமரா மற்றும் சிறிய ஸ்பீக்கர் ஆகியவை பொருத்தப்பட்டிருக்கும்.

இதன் மூலம் பயனர்கள் அழைப்புகளை மேற்கொள்ளவும், இசை கேட்கவும், புகைப்படங்கள் எடுக்கவும் மற்றும் கூகுளின் ஜெமினி செயற்கை நுண்ணறிவு உதவியாளருடன் உரையாடவும் முடியும்.
இந்தக் கண்ணாடிகள் அண்ட்ரோய்டு மற்றும் அப்பிள் ஆகிய இரு கையடக்க தொலைபேசிகளின் இயங்குதளங்களிலும் வேலை செய்யக்கூடிய வகையில் சாம்சங் நிறுவனத்தின் தொழில்நுட்ப பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ளன.
கடந்த 2013 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்திய கூகுள் கிளாஸ், மக்களின் தனியுரிமை மற்றும் கண்காணிப்பு தொடர்பான அச்சங்கள் காரணமாக தோல்வியடைந்தது.
தற்போது, நுகர்வோரைக் கவரும் வகையில் நவீன வடிவமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து கூகுள் மீண்டெழுந்துள்ளது. எனினும், கேமரா பொருத்தப்பட்ட இந்த மாடலும் மெட்டா எதிர்கொண்டது போன்ற தனியுரிமை தொடர்பான கேள்விகளை எழுப்பக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மெட்டா நிறுவனம் 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சந்தைக்குக் கொண்டுவந்த டிஸ்ப்ளே (Built-in display) கொண்ட கண்ணாடிகளைப் போன்றதொரு மாடலையும் கூகுள் உருவாக்கி வருவதோடு, அதன் மேம்படுத்தப்பட்ட சோதனைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.