உச்சம் தொடும் தங்கம் விலை ; பிரபல ஆலயங்களில் பெரும் தொகை தங்கம் மாயம்!
உலக பிரசித்தி பெற்ற கேரளா சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதான முகப்பில், தங்க முலாம் பூசப்பட்ட துவார பாலகர் சிலை கவசங்கள் பதிக்கப்பட்டிருந்தது.
துவார பாலகர் சிலை கவசங்களைப் புதுப்பிக்கும் பெயரில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியே கொண்டு சென்ற போது சுமார் 100 பவுண் தங்கம் அபகரிக்கப்பட்டது.
ஸ்ரீ மகாதேவர் கோவிலில் 31½ பவுண் மாயம்
இந்த விவகாரம் தற்போது வெளியாகி, கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரிகள், இடைத்தரகராகச் செயல்பட்ட உன்னி கிருஷ்ணன் போற்றி ஆகிய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்தநிலையில், கேரளாவில் திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோட்டயம் மாவட்டம் வைக்கம் ஸ்ரீ மகாதேவர் கோவிலில் சபரிமலையைப் போலவே காணிக்கையாக வரும் தங்கம், வெள்ளி உள்பட ஆபரணங்கள் இரும்பு பெட்டகங்களில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
ஆலயத்தில் தங்க ஆபரணங்கள் தனியாகவும், வெள்ளி ஆபரணங்கள் தனியாகவும் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகப் பதிவேட்டில் 3,247.900 கிராம் எனக் குறிப்பிடப்பட்டு இருந்த நிலையில், 2020-2021 தணிக்கை அறிக்கை கடந்த ஆண்டு கேரள உயர் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
அந்த அறிக்கையில், 2,992.070 கிராம் தங்கம் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது 255 கிராம் தங்கம் (31½ பவுண்) மாயமாகி இருப்பது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக தேவஸ்தானம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பதும் தணிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சபரிமலை கோவிலில் தங்கத்தை அபகரித்தது தொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில், வைக்கும் மகாதேவர் கோவிலில் மாயமான 31½ பவுண் தங்கம் குறித்தும், குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.