ஆட்டை திருடிவிட்டு ஆட்டோவை விட்டுச்சென்ற திருடன் ; தமிழர் பகுதியில் சம்பவம்
வீதியோரத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை திருடி, வாடகைக்கு வாங்கியிருந்த முச்சக்கர வண்டியில் ஏற்றிக்கொண்டு சென்ற திருடன், ஆட்டோவை நடுவீதியில் விட்டுவிட்டு, ஆட்டுடன் தப்பி ஓடிய சம்பவம் வெள்ளிக்கிழமை (05) மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் ஆட்டோ உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிசிடிவி காட்சிகள்
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
காத்தான்குடியை சேர்ந்த ஆட்டோ உரிமையாளர் ஒருவர் தனது முச்சக்கர வண்டியை நாள் வாடகையாக ஆயிரம் ரூபாவுக்கு அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கியுள்ளார்.
இந்த நிலையில் ஆட்டோவை வாடகைக்கு எடுத்துச் சென்ற நபர் சம்பவ தினமான வெள்ளிக்கிழமை நகரிலுள்ள கண்ணகை அம்மன் ஆலய பகுதியில் முச்சக்கர வண்டியில் சென்று அங்கு வீதியில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளில் ஒரு ஆட்டை பிடித்து முச்சக்கர வண்டியில் கொண்டு சென்ற திருடன், காத்தான்குடி பள்ளிவாசலுக்கு அருகில் வீதியில் ஆட்டோவை விட்டு விட்டு ஆட்டுடன் தப்பியோடிவிட்டார்.
இதையடுத்து ஆட்டின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து பொலிஸார் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளை கொண்டு முச்சக்கர வண்டியின் இலக்கத்தை கண்டறிந்து அதன் உரிமையாளரை கண்டுபிடித்தனர்.
இதன்போது உரிமையாளர் தனது முச்சக்கர வண்டி வாடகைக்கு வழங்கியதாகவும் இதுவரை முச்சக்கர வண்டியை திருப்பி கொண்டுவரவில்லை என தெரிவித்து தேடியபோது பள்ளிவால் ஒன்றுக்கு அருகில் வீதியில் முச்சக்கர வண்டி மற்றும் அதன் ஆவணங்கள் இருந்தன.
எனினும், திருடன் தப்பி ஓடி தலைமறைவாகியுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.