உலக சந்தை தாக்கம் ; இலங்கையில் எரிவாயு விலை ஏற்றம்
உலக சந்தையில் சவுதி அரம்கோ எரிவாயு விலை சுட்டெண் அதிகரித்துள்ளதைக் கருத்திற்கொண்டு, உள்நாட்டிலும் எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், மார்ச் மாதத்தில் சவுதி அரம்கோ விலை சுட்டெண்ணின் படி ஒரு மெட்ரிக் டொன் எரிவாயுவின் விலை 541.5 டொலரிலிருந்து 787.50 டொலராக அதிகரித்துள்ளது என்றார்.
இந்த உலகளாவிய விலை அதிகரிப்பானது லிட்ரோ மற்றும் லாப்ஃஸ் ஆகிய இரு நிறுவனங்களுக்கும் பொதுவானது என்றும், அதற்கமையவே விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எரிவாயு விநியோகம் குறித்து மேலும் விளக்கிய அமைச்சர், புதிய ஒப்பந்தப்புள்ளியின் படி தற்போது 'ஜியோ கேஸ்' நிறுவனம் மூலம் எரிவாயு விநியோகிக்கப்படுகிறது.
முன்னதாக ஓமானிலிருந்து எரிவாயு பெறப்பட்ட போதிலும், தற்போது 80 வீதம் அமெரிக்காவிலிருந்தும் 20 வீதம் தென்னாப்பிரிக்காவிலிருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது.
இதன்காரணமாக, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களால் எமது எரிவாயு விநியோகத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அவர் உறுதியளித்தார்.
இலங்கையில் பெருமளவிலான எரிவாயுவை ஒரே நேரத்தில் சேமித்து வைப்பதற்கான வசதிகள் போதியளவு இல்லாமையினால் மேலதிக செலவுகள் ஏற்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தற்போது இறக்குமதி செய்யப்படும் எரிவாயு மாலைதீவில் உள்ள ஒரு நிறுவனத்தின் சேமிப்பகத்தில் வைக்கப்பட்டு, அங்கிருந்து மூன்று நாட்களுக்கு ஒருமுறை சிறிய கப்பல்கள் மூலம் (தலா 3,900 மெட்ரிக் தொன்) இலங்கைக்கு கொண்டு வரப்படுகிறது.
இவ்வாறு அடிக்கடி கொண்டு வருவதால் ஏற்படும் மேலதிக போக்குவரத்து செலவுகளும் விலை அதிகரிப்பிற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.
இலங்கையிலேயே நிரந்தரமாக எரிவாயுவைச் சேமித்து வைப்பதற்கான பாரிய சேமிப்பு வசதிகளை நிர்மாணிப்பதற்கான பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் எதிர்காலத்தில் இவ்வாறான மேலதிக செலவுகளைக் குறைத்து மக்களுக்கு சலுகை வழங்க முடியும் என்றும் அமைச்சர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.