உலகளாவிய எரிசக்தி நெருக்கடி ; மீண்டும் உயர்கிறதா எரிபொருள் விலை?
உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு ஆலை மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
தெற்கு பார்ஸ் (South Pars) எரிவாயு வயலில் உள்ள ஈரானின் பெட்ரோ கெமிக்கல் வளாகம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரென்ட் ரக மசகு எண்ணெய் விலை ஒரு கொள்கலனுக்கு 109.91 டொலரை எட்டியது.

இது கடந்த செவ்வாய்க்கிழமை விலையை விட 5% உயர்வாகும். அதேபோல், பிரித்தானியாவின் எரிவாயு விலையும் 6% உயர்ந்து ஒரு தெர்மிற்கு (Therm) 143.53 பென்ஸ் ஆகப் பதிவானது.
எனினும், இந்த விலை உயர்வுகள் மோதலின் ஆரம்பத்தில் காணப்பட்ட உச்ச விலைகளை விடக் குறைவாகவே உள்ளன. ஈரானின் அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து, ராஸ் லஃபான் (Ras Laffan) தொழில்துறை தளத்தில் "பரந்த சேதம்" ஏற்பட்டுள்ளதாக கட்டார் அறிவித்துள்ளது.
இதற்கிடையில், பெட்ரோ கெமிக்கல் வளாகத்தில் ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஈரானின் எண்ணெய் அமைச்சகம் தெரிவித்துள்ளதாக தஸ்னிம் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், தனது எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதலுக்குப் பதிலடியாக "தீர்க்கமான நடவடிக்கை" எடுக்கப்படும் என்று ஈரானின் இராணுவம் எச்சரித்துள்ளது.
அமெரிக்க-சியோனிச எதிரிகளால் நாட்டின் பொருளாதார உள்கட்டமைப்புகள் தாக்கப்பட்டால், ஆக்கிரமிப்பின் மூலத்தையும், தாக்குதல் தொடங்கிய நாடுகளின் எரிசக்தி உள்கட்டமைப்புகளையும் கடுமையாகத் தாக்குவதை தாங்கள் நியாயமானதாகக் கருதுவதாக ஈரான் இராணுவம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.