எரிபொருள் கியூ.ஆர் முறைமை நீக்கப்படமாட்டாது ; அமைச்சர் அனுர கருணாதிலக உறுதி
நாட்டில் தற்போது அமுலிலுள்ள கியூ.ஆர் குறியீடு அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறையை உடனடியாக நீக்கும் எண்ணம் அரசிடம் இல்லை என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
எரிபொருள் விநியோகத்தில் தற்போது எவ்வித தட்டுப்பாடும் இல்லை எனவும், தடையின்றி விநியோகிப்பதற்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு ஏற்கனவே ஓடர் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
எரிபொருள் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், தேவையற்ற எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்துவது அவசியம். எரிபொருளுக்காக அதிகளவு அந்நியச் செலாவணி வெளியேறுவதைத் தடுப்பதற்கு இந்த முறையானது ஒரு கட்டுப்பாட்டை வழங்குகிறது.

வரிசைகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கும், மக்கள் மத்தியில் பீதி கலந்த கொள்வனவைத் தடுப்பதற்கும் இந்த முறைமை உதவியாக உள்ளமை போன்ற காரணங்களால் கியூ.ஆர் முறைமையைத் தொடர்வதாக குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் எரிபொருள் கோட்டாக்களை அதிகரிப்பது குறித்து பரிசீலிக்கப்படலாமே தவிர, கியூ.ஆர் முறையை முழுமையாக நீக்கப் போவதில்லை என அவர் தெளிவுபடுத்தினார்.
சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கியூ.ஆர் குறியீடுகளை முறையாகச் சரிபார்க்காமல் எரிபொருள் விநியோகிக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து பிரதி அமைச்சர் அர்க்கம் இலியாஸ் விளக்கமளித்தார்.
"எரிபொருள் விநியோக முறைமையை அமைச்சு தொடர்ச்சியாகக் கண்காணித்து வருகின்றது.
விடுவிக்கப்பட்ட எரிபொருளின் அளவிற்கும், கியூ.ஆர் முறை மூலம் விநியோகிக்கப்பட்ட அளவிற்கும் இடையே பெரிய வேறுபாடுகள் காணப்பட்டால், அந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என அவர் எச்சரித்தார்.
இது தொடர்பான தகவல்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் ஏனைய எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.