எரிபொருட்களின் விலைகள் அதிகரித்தால் ; சஜித் பிரேமதாச விடுத்த எச்சரிக்கை
நாட்டில் தற்போது வறுமை 30-40 சதவீதமளவில் அதிகரித்துள்ளது. எதிர்காலத்தில் எரிபொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கப்பட்டால் ஒரு நாடாக நாம் இன்னும் பாரதூரமான பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார்.
கொட்டிமுல்வல ரஜமகா விஹாரையில் திங்கட்கிழமை (25) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முன்னேற்றமடைய வழி
வறுமை அதிகரிக்க அதிகரிக்க மக்களின் அழுத்தமும் உற்பத்தித் திறனும் பாதிக்கப்பட்டு, நாடாக முன்னேற்றமடைய வழி இல்லாமல் போகும்.
ஏலவே நாடு வங்குரோதடைந்து காணப்பட்ட காலத்தில் 92 ரக பெட்ரோலின் விலை 470 ரூபாவாகக் காணப்பட்டதுடன், இப்போது இதே ரக பெட்ரோலின் விலை 410 ரூபாவாக உள்ளது.
தற்போதைய சூழலில், குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்து, சுகாதாரம், கல்வி மற்றும் உயர் வாழ்க்கைத் தரம் என்பவற்றைப் பெற்றுக் கொடுப்பது முழுமையாகத் தவறவிடப்பட்டு வருகின்றது.
இத்தகைய கடுமையான வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பில் நாட்டு மக்கள் அனைவரும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
அபிமானம் மிக்க வரலாற்றைக் கொண்ட நமது நாட்டின் 220 இலட்சம் மக்களின் ஆர்வம், அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாட்டை ஒன்றிணைத்துக் கொண்டு, தற்போதைய சூழ்நிலை எவ்வளவு கடினமாகக் காணப்பட்டாலும் ஒரு நாடாக நாம் சரியான வழியில் முன்னோக்கிச் செல்வோம் என்றார்.