யாழில் பிரபல ஆலய பெயரை பயன்படுத்தி இப்படியும் மோசடி; மக்களே உக்ஷார்!
ஈழத்தில் பிரசித்தி பெற்ற சிவ ஆலயங்களுள் ஒன்றான திருக்கேதீச்சர ஆலயத்தின் பெயரை பயன்படுத்தி மக்களிடம் மோசடி வேலைகள் இடம்பெறுவதாக சமூகவலைத்தள பதிவுகள் கூறுகின்றன.
சம்பவத்தில் பெண் தலைமத்துவ குடும்பங்களை இலக்குவைத்து இவ்வாறு மோசடிகள் இடம்பெறுவதாக கூறப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பெண்களின் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உதவி
மோசடி நபர் ஒருவர் , தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு எதிரில் பேசுபவர்களிடம், தான் திருக்கேதீச்சர வளாகத்தில் ஒரு ஆச்சிரமத்தை நடாத்துவதாகவும், கணவனை இழந்து வாழும் பெண்களின் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உதவிகளை வழங்குவதாகவும், கூறுவார்.
அவர்களது பிள்ளைகளின் கல்விச் செலவை முழுவதுமாக தானே பொறுப்பேற்பதாகவும் அதற்காக பெண் தலைமைத்துவ குடும்பங்களை ஒழுங்கு செய்து தாருமாறு கூறுகின்றார்.
இந்த தொலைபேசி இலக்கம் எவ்வாறு கிடைத்தது என்று கேட்டால் sri lanka telecom, dialog உள்ளிட்ட கம்பனிகளின் பெயரை கூறி அவர்களது அலுவலகத்தில் இருந்து தொலைபேசி இலக்கங்களை பெறுவதாக கூறுகின்றார்.
அவர் கேட்டபடி பெண் தலைமைத்துவ குடும்பங்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி இலக்கங்களை வழங்கும்போது அந்த இலக்கத்திற்கு தொடர்புகொண்டு, நிவாரணப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக யாழ்ப்பாணத்தில் பிரபலமான இடம் ஒன்றுக்கு வருமாரு கூறுவாராம். அங்கே சென்றால் எதுவும் வழங்கப்படுவதில்லை.
நூதன முறையில் பணம் பறிப்பு
பின்னர் மானிப்பாயில் உள்ள வங்கி ஒன்றின் பெயரை சொல்லி அந்த வங்கிக்கு அருகேயுள்ள கடை ஒன்றிற்கு போகுமாறு கூறுவாராம்.
அங்கு சென்றவுடன், பெரிய தொகை ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக ஒரு தொகை பணத்தை தனது மேற்குறித்த தொலைபேசி இலக்கத்திற்கு வைப்பிலிடுமாறு கூறுவாராம்.
அதனை நம்பி அவர்களும் அந்த தொகையை வைப்பிலிடுவார்கள். பின்னர் மீண்டும் மீண்டும் இரண்டு தடவைகள் பிறிதொரு தொகையை சொல்லி வைப்பிலிடுமாறு கூறுவாராம்.
பணம் வைப்பிலிட்ட பிறகு அவர் பணத்தை வைப்பிலிட்டவர்களது இலக்கத்தை block செய்வார். பெண் தலைமைத்துவ குடும்பம் என்பது பல்வேறு கஷ்டங்களின் மத்தியில் தான் அன்றாட வாழ்க்கையை நடாத்தி வரும் நிலையில் இவ்வாறான மோசடி பேர்வழிகளால் மிகவும் துன்பியலுக்கு உள்ளாவதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இந்நிலையில் பிரபல ஆலயத்தின் பெயரை பயன்படுத்தி மக்களிடம் கொள்ளயடிப்பவர்கள் தொடர்பில் சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்கள் இது தொடர்பில் பொலிசாரிடம் முறையிடவேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.