மீண்டும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கைக்கு செல்லும் கட்சி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பொறுப்பேற்று மீண்டும் கட்டியெழுப்புமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவராக தாம் வகித்த பதவியை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற்று, கட்சியைப் பொறுப்பேற்று மீண்டும் கட்டியெழுப்புமாறு மைத்திரிபால, சந்திரிகாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார் எனத் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
கட்சித் தலைவர் பதவி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது சட்ட மோதல்களில் சிக்கியுள்ளது. சந்திரிகா தொடுத்த வழக்கினால் மைத்திரிபாலவின் கட்சித் தலைவர் பதவி சவாலுக்கு உள்ளாகியுள்ளது.
இந்நிலையில் மைத்திரிபால இனி கட்சியின் தலைவர் பதவியில் நீடிக்கத் தயாராக இல்லாததால், அவர் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற சந்திரிகா நடவடிக்கை எடுத்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.
இருப்பினும், தேர்தல்கள் ஆணையத்திடம் உள்ள ஆவணங்களில், மைத்திரிபாலவே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.