மட்டக்களப்பில் பிரதேச சபை உறுப்பினரின் வீட்டிற்கு தீவைத்த விசமிகள்
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் பகுதியில் உள்ள பிரதேசசபை உறுப்பினர் ஒருவரின் வீட்டிற்கு தீவைக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக வீட்டின் ஒரு பகுதி எரிந்துள்ளதுடன் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளும் எரிந்துள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏறாவூர் பற்று–செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் சி. சர்வானந்தனின் வீட்டிலேயே இந்த சம்பவம் நேற்று இரவு 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது குறித்த வீட்டிலிருந்த பொருட்கள், கதவு, ஜன்னல், கூரை என்பனவற்றில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தற்செயலாக ஏற்பட்டதில்லையெனவும் தீவைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச சபை உறுப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் வீட்டு உரிமையாளரான சி. சிவானந்தன் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
நேற்று இரவு வீட்டில் இல்லாத நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் உடனடியாக முறைப்பாடு செய்ததாகவும், இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பொலிஸார், மின்சார சபையினர் விசாரணைகளை முன்னெடுத்தாகவும் பிரதேசசபை உறுப்பினர் தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேநேரம் தீ சம்பவம் இடம்பெற்ற வீட்டிற்கு வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் சுதாகரன் மற்றும் ஏறாவூர்ப்பற்று பிரதேசபை உறுப்பினரும் ஊடகவியலாளருமான செ.நிலாந்தன் ஆகியோர் நேரில்சென்று பார்வையிட்டனர்.