இலங்கையில் கஞ்சா பயிரிட வெளிநாட்டவர்களுக்கு அனுமதி!
இலங்கை அரசாங்கம் முதல் முறையாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கஞ்சா பயிரிட அனுமதித்துள்ளது.
இதன் முதன்மை நோக்கம் மருந்து உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காகப் பிரத்தியேகமாகப் பயன்படுத்தப்படும் கஞ்சா சார்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம், நாட்டிற்கு குறிப்பிடத்தக்க அந்நியச் செலாவணியை ஈட்டுவதாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
7 வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அனுமதி
இந்தத் திட்டத்திற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட 37 விண்ணப்பங்களில், தகுதிவாய்ந்த 7 வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு 6 மாத காலத்திற்கான தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் காலகட்டத்தில் அவர்களின் திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பதைப் பொறுத்து எதிர்காலத்தில் பயிர்செய்கை காலம் நீட்டிக்கப்படும்.
இந்தத் திட்டத்தைத் தொடங்க, ஒரு முதலீட்டாளர் குறைந்தபட்சம் 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஆரம்ப முதலீடாகச் செய்ய வேண்டும். மேலும் இலங்கை மத்திய வங்கியில் 2 மில்லியன் அமெரிக்க டொலர் பத்திரத்தை வைப்பு செய்வது கட்டாயமாகும்.
இந்தத் தகவலை ஆயுர்வேதத் திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் டொக்டர் தம்மிக்க அபேகுணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார். இந்தப் பயிர்ச் செய்கைக்காக மீரிகம பகுதியில் 64 ஏக்கர் பரப்பளவு ஒதுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின்படி கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் இந்தப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
அதன்படி, பயிர்செய்கை செய்யப்பட்ட நிலத்தைச் சுற்றி வலுவான பாதுகாப்பு வேலி அமைப்பதோடு மட்டுமல்லாமல், விசேட அதிரடிப்படை மற்றும் இலங்கை காவல்துறையிடமிருந்து பாதுகாப்பைப் பெறுவதும் கட்டாயமாகும்.
இந்தத் திட்டத்தின் மூலம் வளர்க்கப்படும் கஞ்சா இலங்கையில் பயன்படுத்தப்படாமல் முழுவதுமாக ஏற்றுமதி செய்யப்பட வேண்டும்.
அதோடு கஞ்சா செடியின் எந்தப் பகுதியையும் (விதைகள், இலைகள், வேர்கள்) வெளிப்புறச் சூழலுக்கு வெளியிடாமல் அழிக்க சட்டங்களும் விதிமுறைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இலங்கை முதலீட்டுச் சபை, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு, சுற்றாடல் அமைச்சு மற்றும் ஆயுர்வேதத் துறை உள்ளிட்ட பல அரச நிறுவனங்கள் இந்தத் திட்டத்தை மேற்பார்வையிட இணைந்து செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.