விசா கிடைக்கவில்லை ; காதலனை காண தமிழகத்திற்கு ஓடிய இலங்கை காதலி!
காதலனை கரம் பிடிப்பதற்காக இலங்கையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் படகில் கடல் தாண்டி தனுஷ்கோடி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. விசாரணைகளின் பின்னர் அவர் மண்டபம் முகாமில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை இளம்பெண் ஒருவர் வந்திருப்பதாக கடலோர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் அந்த பெண்ணை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
முகாமில் காதல்
இலங்கை மன்னார் ஆண்ட குளம் பகுதியை சேர்ந்த விதுர்ஷியா என்ற குறித்த பெண் ஏற்கனவே தனது தாய், தந்தையுடன் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள மறு வாழ்வு முகாமில் வசித்துள்ளதுடன் அப்போது அவர், ஒரு வாலிபரை காதலித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் விமானத்தில் இலங்கைக்கு வந்துள்ளதுடன் இங்கிருந்து திரும்பி இந்தியா செல்ல அவருக்கு விசா கிடைக்காததால் காதலனை கரம்பிடிக்க படகில் தமிழகம் செல்ல முடிவெடுத்துள்ளார்.
இதற்காக அப்பெண் தனது நகையை விற்று 2 லட்சம் ரூபாய் பணத்தை திரட்டி படகோட்டியிடம் கொடுத்து, அவரது ஏற்பாட்டில் தலைமன்னார் கடற்கரையில் இருந்து பிளாஸ்டிக் படகில் ஏறி அரிச்சல்முனைக்கு சென்றுள்ளார்.
அந்த பெண்ணை இறக்கி விட்டு படகோட்டி மீண்டும் இலங்கையை நோக்கி தப்பிச் சென்றதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாரணைக்கு பின்னர் அந்த பெண் மண்டபம் முகாமில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் காதலனை கரம்பிடிக்க இலங்கையிலிருந்து படகில் இளம்பெண் ஒருவர் கடல் கடந்து வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.