18 இலட்சத்தை கடந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை
2025 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 18 இலட்சத்தைத் தாண்டியுள்ளது என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் 15 ஆம் திகதி வரையான சுற்றுலாப் பயணிகள் குறித்த புதிய புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளதன் மூலம் இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
2025 இல் இதுவரையான காலப்பகுதியில் 1,801,151 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதுடன், ஒக்டோபர் மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் 75,657 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிகபட்சமாக இந்தியா (396,274), ஐக்கிய இராச்சியம் (167,886), ரஷ்யா (125,950), ஜேர்மனி (111,677), சீனா (108,040), பிரான்ஸ் (90,250), அவுஸ்திரேலியா (81,040), நெதர்லாந்து (53,922), அமெரிக்கா (50,027) ஆகிய நாடுகளில் இருந்து வருகைத் தந்துள்ளனர்.
மேலும், இத்தாலி (39,932), கனடா (37,606), ஸ்பெயின் (36,430), போலந்து (36,389) ஆகிய நாடுகளிலிருந்தும் கணிசமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர்.
முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் கடந்த 2024 ஆம் ஆண்டில் 20 இலட்சத்துக்கும் அதிகமான (2,053,465) சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்தனர்.
இலங்கையில் இதுவரை அதிகபட்சமாக சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த ஆண்டு 2018 ஆகும். அந்த ஆண்டில் 23 இலட்சத்துக்கும் அதிகமான (2,333,796) சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர்.
இலங்கையின் வருடாந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 20 இலட்சம் என்ற எல்லையை 2016, 2017, 2018 மற்றும் 2024 ஆகிய நான்கு சந்தர்ப்பங்களில் கடந்துள்ளது.